நொச்சிக்குளம் வாள் வெட்டு- சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்

215 0

திருகோணமலை – நொச்சிகுளம் பகுதியில் வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில்  சந்தேக நபர்களை இன்று (11) ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

சாந்திபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சாமி ஆடுவதற்கு சில தரப்பினர் தடை விதித்தமையினால் இரண்டு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி மாலை 6.45 மணியளவில் நொச்சிக்குளம்-சாந்திபுரம் பகுதியில் ஏற்கனவே வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் கொண்ட ஒரு குழுவினர் மற்றைய குழுவினரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறித்த மூன்று பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதேவேளை வாளால் வெட்டிக் காயப்படுத்திய சந்தேக நபர்கள் மூவரும் தலைமறைவாகிய நிலையில் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த சந்ரலாலின் ஆலோசனையின் பெயரில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.