இணுவிலில் கைக்கோடாரியை காட்டி கொள்ளையிட்ட சம்பவம் – மேலும் மூவர் கைது

149 0

இணுவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தில் 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி இணுவிலில் உள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவு 12.45 மணியளவில் புகுந்த மூவர் கைக்கோடாரிகளைக் காண்பித்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தில் 21 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் நிலையத்தில் ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் சந்தேக நபர் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரிடமிருந்த 13 தங்கப் பவுண் நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தார்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.  சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 2கைக்கோடாரிகள் மற்றும் 6 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை சந்தேக நபர்கள் மூவருக்கு உதவியளித்து கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாகவிருந்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளை  சம்பவத்துடன் தொடர்புடைய  மூவரும் அவர்களுக்கு உதவியதாக ஒருவர் என நால்வரை காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.