சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் – ராமதாஸ்

155 0

சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முதன்மைக் கோரிக்கையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமல்ல என்று மத்திய அரசு கூறி விட்ட நிலையில், அது குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்றே சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து குழுவுடன் சந்தித்து வலியுறுத்திய பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், இந்த வி‌ஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

எனவே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும், இந்த வி‌ஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் காட்டவும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.