மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பங்கு தந்தை ஒருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டிவிரிச்சான் கோவில்மோட்டை பகுதியில் அமைந்துள்ள வயல் காணி தொடர்பிலேயே இந்த வாக்குவாம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக குறித்த வயல் காணியில் அப்பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்ற போதும் அந்த காணியை தமக்கு வழங்குமாறு மன்னார் மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.
இந்நிலையில் மன்னார் மடு ஆலய நிர்வாகத்துக்கு எதிராக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
எனினும் மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரின் அனுமதியுடன் விவசாயிகள் குறித்த வயல் காணியை ; உழவு செய்து பயிர் செய்ய தயாராகி வருகின்ற நிலையில், அத்துமீறி பிரவேசித்த பங்குத்தந்தையும் மடு தேவாலயத்தில் வேலை செய்கின்ற சிலரும் இரண்டு உழவு இயந்திரங்களில் வருகைதந்து அத்துமீறி விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டுள்ளனர் .
இந்த நேரத்தில் குறித்த பங்கு தந்தைக்கும், விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பங்கு தந்தை குறித்த வயல் காணியை விட்டு வெளியேறி சென்றிருந்தார்.
இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்னாருக்கு விஜயம் செய்திருந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குறித்த காணியை விவசாயிகளுக்கு பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

