வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா நகரசபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டிருந்த தேக்கவத்தையில் வசித்து வரும் திருமதி.த.புஞ்சிகுமாரி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின்; விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.
இதனிடையே வவுனியா மாவட்டத்தில் நான்கு கிராம அலுவலர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆண்டியாபுளியங்குளம் கிராம அலுவலர் மற்றும் விடுமுறையில் இருந்த பெண் கிராம அலுவலர் ஆகிய இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல் கட்டி ஆகிய பிரிவு கிராம அலுவலர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான ஐங்கரநேசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்பபடுத்தலில் உள்ளனர்.