மட்டக்களப்பில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தங்கசங்கிலி அறுப்பு!

163 0

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் படுத்து உறங்கிய பெண் ஒருவரின் கழுத்தில் கொள்ளையர் ஒருவர் கத்தியை வைத்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க சங்கிலியை பறித்து எடுத்துச் சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்து புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்து வருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும்  வயதான மாமியார் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகர கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் ஒருவர் உறக்கத்தில் இருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை கழற்றி தருமாறும் அல்லது கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியதையடுத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த நிலையில் அதனை  பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு காவல்துறை தடவியல் பகுப்பாய்வு பிரிவினர் அன்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.