மன்னார் மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு!

210 0

மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இது குறித்து இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் -நேற்றைய தினம் வியாழக்கிழமை(27) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குருநாகல் பகுதியை சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வாரங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். -இவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அந்தவகையில் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில்இடம்பெற்ற இரண்டு கொரோனா மரணங்களுடன் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

-மேலும் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை வரை 515 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 1556 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.