நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன்

140 0

சவால் விடுகிறேன், ஒரு ரூபாய் பணத்தையாவது நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன் என யாழ். மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிலரால் விஷமத்தனமாக செய்யப்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிமிக்கதான நடவடிக்கை.

வீதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவது மாநகர சபையினுடைய பூரண அனுமதியுடனே செய்யப்பட்டு வருகிறது.

நான் மாநகர முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதலாம் மாதம் 13ஆம் திகதி நடந்த முதல் கூட்டத்தில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பகிரங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகைகளில் செய்தி பிரசுரிக்க கோரப்பட்டதுடன், இரண்டாம் மாதம் 13ஆம் திகதி பத்திரிகைகளில் பகிரங்கமாக வீதிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்த விளம்பரதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பப்பட்டது.

யாழ். மாநகர எல்லைக்குள் இருக்கின்ற வரலாற்று புகழ்பெற்ற இடங்களை காட்சிப்படுத்துவதற்கும் அதனூடாக சுற்றுலாப் பயணிகளை தூண்டுவதற்கும் மாநகர எல்லைகளை அடையாளப்படுத்துவதற்கும், வீதியிலே விளம்பர பலகைகளை அமைக்க அனுமதி தாருங்களென வீதி அபிவிருத்தி அதிகாரி சபைக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.

மாநகரசபைக்கு இந்த வருட கணக்காய்வின்படி கோவிட் காரணமாக 239 மில்லியன் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் எங்களுடைய வட்டார அபிவிருத்திகள் பாதிக்கப்படுதல், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை, குப்பைகளை அகற்றும் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுமென்பதால் நாங்கள் வருமானத்தை அதிகரிக்க புதுப்புது வழிகளை யோசிக்க வேண்டியுள்ளது.

இந்த விளம்பர பலகை ஒன்றின் மூலம் ஒரு வருடத்துக்கு ஏறத்தாழ ஒரு இலட்சத்து 90 ஆயிரம் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 20 இலட்சம் வரை எதிர்பாராத ஒரு வருமானம் கிடைக்கவுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு வருடமும் இந்த தொகை மாநகர சபைக்கு கிடைக்கும். நாங்கள் எடுத்த தீர்மானம் தொடர்பாக பல தடவை மாநகரசபை கூட்டங்களின்போது தெரிவித்திருந்தோம். அப்போது இவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா?

சிங்கள நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளார், ஒளித்து செய்கின்றாரெனக் கூறுகின்றனர். அதிகளவு தொகையை விளம்பர பலகைக்கு வழங்க நிறுவனங்கள் தயாரில்லை.

இரண்டு இடத்துக்கு மாத்திரமே தற்போது விளம்பரதாரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் நிறுவனங்கள் இதற்காக முன்வந்தால் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

எதற்காக இனவாதம் பேச வேண்டுமென நாங்கள் யோசிக்க வேண்டும். இங்கு உள்ள தமிழ் நிறுவனங்கள் முன்வந்தால் எட்டு வீதிகள் உள்ளன. அவற்றை அவர்களுக்கு வழங்க முடியும்.

இது தொடர்பாக அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி கேட்டபோது வீதியை பயன்படுத்துவதற்கான அபிவிருத்தி கட்டணமாக 8 இலட்சம் ரூபாய் செலுத்தவேண்டுமென கோரப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிய 8 இலட்சம் ரூபாய் அதிகமெனக்கூறி எந்த விளம்பர நிறுவனங்களும் முன்வராத நிலையில் “மாநகரம் அன்புடன் வரவேற்கின்றது” என்ற விளம்பர பலகையை அமைக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக நான் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 50 வீதம் குறைக்க சிபாரிசு செய்தேன்.

அதை குறைப்பதும் குறைக்காமல் விடுவதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடைய தீர்மானத்திற்கு உட்பட்டது. இதனை ஏன் குழப்புகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் இவற்றில் காசடித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டுவிலக தயார்.

அதேபோல அந்த பணத்தின் இரு மடங்கை நான் வழங்க தயார். என்னுடைய சம்பள பணத்தை நான் இன்னொருவருக்கு வழங்குகிறேன். முன்னாள் முதல்வர் 2 இலட்சத்துக்கு மேலே எடுத்ததாக ஒரு கருத்து ஒன்று இருக்கிறது.

என்னுடைய சொந்த பணத்திலேயே மக்கள் பணிகளை செய்து கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட நான் சவால் விடுகிறேன். நான் ஒரு ரூபாய் பணம் திருடியதாக நிரூபியுங்கள் நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.