பெண்ணுரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் ஒலித்த குரல் மௌனித்தது -சுரேஷ்

242 0

எமது இனிய நண்பரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியுமான தவராசா அவர்களின் பாரியாரான திருமதி
கௌரிசங்கரி தவராசா அவர்கள் இயற்கை எய்தியமையானது தமிழர்களுக்கு பேரிழப்பாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் எமது இளைஞர்கள் யுவதிகள் கைது செய்யப்பட்டபொழுது இரவு பகல் பாராது அவர்களின் வழக்குகளை எடுத்து வாதாடுவதற்காக நேர்மையாகக் கடமையாற்றிய ஒரு சட்டத்தரணி. தமிழ்ச் சமூகம் மத்தியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு வாதாடிய பிரபல சட்டத்தரணி மாத்திரமல்லாமல் அவரது கணவர் தவராசா மற்றும் ஏனைய சட்டத்தரணிகளின் உதவியுடன் அவர்களை விடுவித்தவர்.

பல்வேறு சிறைச்சாலைகளுக்கும் சென்று அரசியல் கைதிகளின் தேவைகளை பிரச்சினைகளை அறிந்துவந்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் முன்னின்று உழைத்தவர். மனித உரிமைகள் பெண்விடுதலை
போன்ற விடயங்களில் மாத்திரமன்றி தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பாகவும் ஆழமான அறிவு
கொண்டவர். அவரது கணவர் திரு.தவராசாவினுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்தவர்.

யாரும் எப்பொழுதும் அணுகக்கூடிய வகையில் எளிமையாக வாழ்ந்தவர். அத்தகைய ஒருவர் எம்மைவிட்டு நீங்கியமையானது அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். திருமதி கௌரிசங்கரி தவராசா
அவர்களின் ஆத்மார்த்தமான பணிகள் என்பது தமிழ் மக்கள் மத்தியில் நீண்டகாலம் வாழும். அன்னாரைப்
பிரிந்துவாடும் அவரது கணவர் குடும்பத்தினர் உறவினர் அரசியல் நண்பர்கள் தொழில்சார் உறவுகள்
மற்றும் நண்பர்களுடன் நாமும் துயர் பகிர்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.