கொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டில், அவர் மறைவுக்கு பிறகு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சயான் ஜாமினில் வெளியே இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அப்போது முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை அளித்தாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டதால், அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘‘திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். கொடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க சதி செய்கிறார்கள்’’ என்று தி.மு.க. அரசை குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்கள்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த அவர்கள், தி.மு.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
கவர்னரின் பதிலை பொறுத்து, அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திட்டமிட்டுள்ளனர்.