தாயின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை

129 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடி ஆறு காஞ்சிரங்குடா பகுதியில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாக்கியராசா மாலினி எனும் 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், தான் தனது தாயை இழந்துள்ளதாகவும், அதனால் தானும் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக நீண்ட நாட்களாக கூறிவந்துள்ள நிலையில், அவரின் வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.