கைக்குண்டுடன் முன்னாள் போராளி கைது

209 0

அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்து சென்ற விநாயகபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை களுவாஞ்சிக்குடி நகர்பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இன்று (13) பிற்பகல் கைது செய்துள்ளனர்..

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினர் இவரை கண்காணித்து வந்த நிலையில் குறித்த நபர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கைக்குண்டு ஒன்றை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனைக்காக எடுத்துக் கொண்டு பிரயாணித்த போது அவரை பின் தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கும் பொலிஸ் விடுதிக்கும் இடையிலான பிரதான வீதியில் பிற்பகல் 1.30 மணியளவில் புலனாய்வு பிரிவினர் பின் தொடர்வதை கண்டு எடுத்து வந்த குண்டை அந்த பகுதியில் வீசி விட்டு தப்பியோட முயற்சித்த போது அவரை விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருதாகவும் விசாரணையின் பின்னர் சந்தேகநபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.