மன்னார் மாவட்டத்தில் ’நாளை முதல் 2ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி

177 0

மன்னார் மாவட்டத்தில், ஜுலை மாதம் சினோஃபோம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு,  நாளை (9) முதல் 2ஆவது தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், ஜூலை மாதம் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் சினோஃபோம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2ஆவது தடுப்பூசி, நாளை (9) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை, பேசாலை சென். மேரிஸ் கல்லூரி ஆகியவற்றிலும், அன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை, தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றிலும் சினோஃபோம் தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

‘அதே போன்று, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், நாளை காலை 8 மணி முதல் சினோஃபோம் தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி, முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும்.

‘நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்,   நாளை காலை 8 மணி முதல், வங்காலை புனித ஆனாள் தேவாலயத்திலும், செவ்வாய்க்கிழமை (10 )  காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நானாட்டான் டிலாசால் பாடசாலையிலும், அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணி வரை முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும்.

‘எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10), மடு ஆலயத்துக்கு அருகில் உள்ள வைத்தியசாலையில், காலை 8 மணி முதல் சினோஃபோம் தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.

‘மேலும், இரணையிலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார வைத்தியசாலையிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படும்’ என, அவர் மேலும் தெரிவித்தார்.