ஓட்டமாவடியில் இன்னும் 700 உடல்கள்தான் அடக்கம் செய்யலாம்

157 0

மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்  ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இனி அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் 700 உடல்கள மட்டுமே அடக்கம் செய்யக்கூடிய இடம் மட்டுமே உள்ளது  என இன்று செவ்வாய்க்கிழமை (03)  ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடலகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன. இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் உடல்கள் அடக்கம் செய்துவந்த நிலையில் இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்துவருகின்றோம்.
இதுவரையில் 1279 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 700 உடல்கள் மட்டுமே  அடக்கம் செய்ய முடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் இந்த இடம் முடிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடம் தொடர்பாக கடந்த 29ம் திகதி மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபர் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
எனவே நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வேறு எங்கும் ஒழுங்கு செய்யப்படாத நிலையிலே இந்த ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் இது முடிவுறும் போது இந்த இடத்தில் மேலும் இடத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நாட்டில் வாழுகின்ற எல்லோரது பொதுவான பிரச்சனை  எனவே இந்த இடம் முடிவுறுகின்றபேர்து மாற்று இடத்தை எல்லோருமாக சேர்ந்து பெறவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

நாட்டிலே எந்த பாகத்தில் இருந்தாலும் தேடி அதனை அடையாளப்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் சமயத்தலைவர்கள் எல்லோரிடமும் இருக்கின்றது என்ற அடிப்படையில் எல்லோரும் செயற்பட வேண்டும் என்றார்.