மதுசூதனனுக்குத் தீவிர சிகிச்சை; வதந்திகளை நம்ப வேண்டாம்: அதிமுக வேண்டுகோள்

128 0

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப். 6-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 20) அவருடைய உடல்நிலை மோசமடையவே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் மதுசூதனன் உடல்நிலை குறித்த தவறான தகவல்கள் தொடர்து வலம் வந்தன. இந்நிலையில் அதிமுக இதனை மறுத்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.