பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் 2 ஆவது நாளாக இன்று (01) முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வந்த போதிலும், 13 கிலோ மாத்திரம் பறிக்க முடியும் என கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கினறர்.
குறித்த தோடட்ட தொழிலாளர்கள் 13 கிலோ பறிக்க முடியாது என தெரிவித்தமைக்கமைய வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தொழில் வழங்க முடியும் என நிர்வாகம் அறித்துள்ளதை அடுத்து இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியினால் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதோடு எமது பிரச்சினை தொடர்பில் மலையக அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கொட்டியாகலை தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மஞ்சுல சமரகோனிடம் பலமுறை தொடர்பினை ஏற்படுத்திய போதும் அது பயனிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் கொட்டியாகலை தோட்ட நிர்வாகத்திடம் வினவிய போது, எமது நிறுவனத்தின் ஊடாக 18 கிலோ தேயிலை கொழுந்தினை பறிக்குமாறு பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊடாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 13 கிலோ மாத்திரமே பறிக்கிறார்கள். இவ்வாறு குறைந்தளவில் தேயிலை கொழுந்து பறிப்பதனால் தோட்ட நிர்வாகத்திற்கும் எமது நிறுவனத்திற்கும் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தொழில் வழங்குமாறு எமது நிறுவனத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் 18 கிலோ தேயிலை கொழுந்தினை கட்டாயம் பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

