யாழ். குடாநாட்டில் அடுத்த வாரம் முதல் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்

278 0

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட வர்களுக்கு அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையால் வழங்கப்பட்ட அட்டையை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதைப் போன்றே ஜூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாட்பட்ட சிறுநீரக நோயாளர்கள் மற்றும் காச நோயாளர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்.மாவட்டத்திலுள்ள நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நோயாளர்களுக்கான கொவிட் தடுப்பூசி இன்று சனிக்கிழமை
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித் துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் வழங்கப்படும்.

இவர்கள் தாம் சிகிச்சை பெறும் சிகிச்சை நிலையத்துக்கான பதிவு (கிளினிக் கொப்பி,
நோய் நிர்ணய அட்டை ) மற்றும் உரிய ஆவணங்களுடன் தமக்கு அருகிலுள்ள
மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று இத் தடுப்பூசி
களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் யாழ்ப்பாணம் காசநோய் சிகிச்சை நிலையத்துக்கு இன்று சனிக்கிழமை காலை சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றுள்ளது.