மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு

409 0

மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது.  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும் ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும்  கோறளைப்பற்று மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 46 பேருக்கும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.