’அரசியல்வாதிகளின் ஆதரவோடு மணல் கொள்ளை’

236 0

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு, சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறந்தே செயற்படுகின்றனர் எனவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர் மக்களைச் சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது குறித்த பகுதி மக்களால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்றும் இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என சாணக்கியன் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத மண் அகழ்வுகள் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுகின்றன.  இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து அந்த ஆற்றுப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த ஆற்றை ஊடறுத்து, இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும், இதனால் தமது தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.