பூனைகள், நாய்களுக்கு பரவும் டோக்ஸோகாரியாசிஸ் எனும் வைரஸ், தற்போது சிறுவர்களுக்கு தொற்றுவதாக, லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுடன் சிறுவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த வைரஸ் உருவாகின்றது. இந்த விலங்குகளுடன் தொடர்பை பேணும் சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தோலில் புழுக்கள் ஏற்படும்.
பின்னர் அந்த புழுக்கள் குழந்தைகளின் கண்கள், மூளை மற்றும் நுரையீரலுக்குள் நுழைந்து கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த சில நாட்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சைக்காக லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு வந்தனர்.
இதுபோன்ற வீட்டு விலங்குகளுக்கு ஆரம்பத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் அந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
எனினும் வீட்டு வளர்ப்புப் பிராணிகளிடம் சிறுவர்கள் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்களது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

