தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இதுவரை 9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. பல்வேறு மாநிலங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
ஆரம்பத்தில் தடுப்பூசி பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசிகள் வீணானது. தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்து வருகிறார்கள்.
ஆனால் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட தடுப்பூசி இல்லாமல் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று மேலும் 6.16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகிறது. ஐதராபாத்தில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவேக்சின் தடுப்பூசிகளும், புனேயில் இருந்து 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று தமிழகம் வருகிறது.
இந்த தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

