யாழ்ப்பாணம் பிரதேசத்தில், பிறந்து ஒரு மாதத்துக்குட்பட்ட மூன்று சிசுக்கள் உள்ளிட்ட 5 சிசுக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிறந்து 12 நாள்களேயான சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாள்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த சிசு ஒன்றுக்கும் தாய்க்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையின் முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாள்களேயான சிசுவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, இளவாலை பகுதியை சேர்ந்த 09 மாத சிசுவுக்கும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 10 மாத சிசுவுக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.