வவுனியாவில் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கைது

309 0

வவுனியாவில் பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரைக் குற்றத்தடுப்புபிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (19.05) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து இரண்டரைப்பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.