கண்ணீர்க் கடல். அவுஸ்திரேலியாவிலிருந்து வானிலன்.

577 0

கண்ணீர்க் கடல்.
******
கந்தகக் காற்றிலே
வெந்து மடிந்தோம்…!
சொந்த மண்ணிலே
செத்து விழுந்தோம்….!

முள்ளிவாய்க்கால்
மீது கிடத்தி
கொள்ளி வைத்தான் எதிரி!
கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு,
சாக வைத்தான் சிதறி!!

பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா…
நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா…
நெஞ்சம் வெடிக்கின்ற சேதி தினமே….
பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா…!

காப்பாற்ற முடியலையே
கதறி அழுதோம் நாங்கள்…
கேட்பாரற்று மனிதம் சிதற
பதறித் துடித்தோம் நாங்கள்

ஊமையான சர்வதேசம்
செய்ததெல்லாம் சர்வநாசம்…!
போலியான மனிதநேயம்…
சொன்னதெல்லாம் வெற்று வேஷம்…!

உரிமைகேட்டு உயிரைக் கொடுத்து
எழுந்து நின்ற போராட்டம்…!
உலக நாடு உதவி கொடுத்து
சூழ்ந்து செய்த சதியாட்டம்.!

இடையனற்ற ஆடுகளாய் நாம்…!
திசையிழந்து
அலைகின்றோம்…!
எம் நாடு வேண்டி விடுதலைப்போரை,
மாவீரர் கனவோடு தொடர்கின்றோம்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் விழுந்தோம்,
விதைபோல் மீண்டும் எழுவோம் !
தளரும் நிலையில் தமிழன் இல்லை …!
தலைகள் குனியும் வாழ்வும் இல்லை!!

தமிழின் தாகம் அடங்காது!
தமிழீழக் கனவென்றும் முடங்காது!!
தமிழன் உணர்வுக்கு தடையேது?!
புலியன்றி அவனுக்கு வேறு படையேது!?

விருட்சமாய் பெரு வெளிச்சமாய்
வளரும் ஒருநாள் விடியும்!
புலரும் ஒரு நாள் உலகப் படத்தில்,
தமிழ் ஈழ தேசம் தெரியும்!

நாம் சிந்திய குருதியில்…சிவந்த மண்மீது
சிரிக்கும் காந்தள் பூக்கள் பூக்கும் !
சுதந்திரக் காற்றில் எங்கள் மண்ணும்,
நிச்சயம் ஒருநாள் திளைக்கும்!

நெருப்பாற்றைக் கடந்த
வலியோடு,

அவுஸ்திரேலியாவிலிருந்து
வானிலன்.