மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!!

632 0

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக  இன்று திங்கட்கிழமை (5)  மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு   துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை  நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு   ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள மக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து   புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆயரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்    ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று   ஞாயிற்றுக்கிழமை மாலை  3  மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்தி பவனியூடாக  கொண்டு செல்லப்பட்டது.

இன்று திங்கட்கிழமை அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் நேற்று மதியம் 3 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், மாலை 5.30 மணியளவில் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படது.

அதனைத் தொடர்ந்து   மன்னார் நகர பகுதியில் அமைக்கப்பட்ட மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உருவச் சிலையை மாலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை திறந்து வைத்தார்.