யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுப் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களில் இருவர் கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 778 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம் பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியவில்லை என்று அறிக்கையிடப்பட்டது. இவர்களிடம் நேற்று மீளவும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது ஒருவருக்கு தொற்று கண்டறிப்பட்டது.
கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளில் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. மேலும் திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மேலும் மூவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள். இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்றவர்கள்.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பொறியியலாளர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கும் நேற்றுத் தொற்று கண்டறியப்பட்டது.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தலா ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

