யாழ். வரணியில் தொல்பொருள் தமிழர்கள் அடையாளங்கள் கண்டுபிடிப்பு

356 0

யாழ்.வரணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்றிருந்தபோது மிக பழமையான தமிழரின் தொல்பொருள் அடையாளங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்லியல் அகழ்வு அதிகாரி தலைமையில் குறித்த எச்சங்கள் மீள்நிர்மானம் செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடமராட்சியில் இருந்து போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வீதியோரமாக வரணிப் பகுதியில் இந்த தொல்பொருள் எச்சங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அக்காலப்பகுதியில் வீதியால் போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் மற்றும் சுமையை சுமந்து வருபவர்கள் சுமையை சுமைதாங்கியில் இறக்கி வைத்து களைப்பாறி நீர் அருந்தி விட்டு செல்லும் வகையில் குறித்த குடிநீர் கிணறும், சுமைதாங்கியும் அமைந்துள்ளது. இது 1960 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாகவும் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் சிதைவடைந்திருந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இருந்த குறித்த தொல்லியல் எச்சங்கள் தற்போது வீதி அகலிப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் அகழ்வு அதிகாரிகளால் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அளவுகளில் தற்போது மீள்நிர்மானம் செய்யப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.