நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஜே.வி.பி. பரிந்துரை

289 0

புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஆளும் கட்டமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழிந்துள்ளது.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. எனவே, மக்களின் உண்மையான ஆணையை பிரதிபலிக்க பொருத்தமான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை, சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது புதிய அரசமைப்பில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

புதிய அரசமைப்பை அமுல்படுத்துவதன் மூலம் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரங்களை வலுப்படுத்தவும், கருவூலத்திலிருந்து நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கும் ஒரு விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.