திருநெல்வேலி சந்தை மறுஅறிவித்தல் வரை மூடல்

498 0

திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியிலுள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

இதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக இன்று முதல் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மைத் சுயதனிமைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறும், இவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் தமது உறவினர்களையும், பிரதேசத்தையும் கொரோனா பரவலிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.