கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலய தொல்லியல் அகழ்வு: மக்களின் கடும் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

320 0

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்லியல் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க இன்று (புதன்கிழமை) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், அகழ்வுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மூன்றாவது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்த பணியை மேற்கொள்ளவிடாது கோயில் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி நடவடிக்கையை மேற்கொள்ளவிடாது தடுத்துள்ளனர்.

இதன்போது, அங்கு சென்றிருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது. பொதுமக்களின் எதிர்ப்புக்கான காரணம் தொடர்பாக பொலிஸாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பாகக் கூடியிருந்த பொது மக்களால் மகஜர் ஒன்று பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் இன்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த தொல்லியல் அமைவிடப் பகுதியில் எவ்வித மாற்றங்களையும் செய்யக்கூடாது எனவும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வரை எவ்வித அகழ்வுப் பணிகளும் இடம்பெறாது என்றும் பொலிஸார் வாக்குறுதியளித்ததாக கிளிநொச்சி சின்மயா மிசன் சுவாமிகள் சுவாமி சிவேந்திர சைதன்யா தெரிவித்துள்ளார்.