யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!

330 0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 14ஆவது நாளாகத் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியார் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக, இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புத் தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.