மாபெரும் தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது- காணொளி

431 0

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும்
தீப்பந்த போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நல்லூர் பின்வீதி போராட்ட களத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் பொதுஅமைப்புக்கள் இணைந்து வடக்கு கிழக்கில்
சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர், மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 4 வருடங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மேலும் தமிழரின் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐநா கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என வலியுறித்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் ஈகைச்சுடரினை வேலன் சுவாமிகள் ஏற்றிவைத்தார். இதில் மத தலைவர்கள்,
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.