கொரோனா அச்சுறுத்தல் – மதுபான விற்பனை நிலையத்திற்கு பூட்டு

196 0

தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு நேற்று (06) தலவாக்கலை பகுதியை சேர்ந்த ஒருவர் வருகை தந்து அங்கிருந்து மதுபானம் அருந்தி சென்றுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த மதுபான விற்பனை நிலையம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

குறித்த மதுபான விற்பனை நிலையம் தலவாக்கலை நகரில் சுற்றுவட்டத்திற்கு முன்பாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த கொரோனா தொற்றாளர் தலவாக்கலை நகரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கும் சென்றுள்ளார். இதனால் மேற்படி உடற்பயிற்சி நிலையமும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தலவாக்கலை நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை தலவாக்கலை லிந்துலை நகர சபை சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.