யாழில் ஆசிரியை உட்பட வடக்கில் மேலும் 20 பேருக்கு கொரோனா

397 0

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 12 பேர் மன்னாரிலும், 8 பேர் யாழ்ப்பாணத்திலும் கண்டறியப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர் நவாலியில் கடந்த வாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் பஸ்ஸில் முல்லைத்தீவுக்கு சென்று திரும்பியவர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றியவர்கள்.

இதேவேளை, மன்னார் நகரிலுள்ள கொமர்ஷல் கிறடிட் நிதி நிறுவனத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரி சபையில் பணியாற்றும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்கள்.

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, மன்னார் நகரிலுள்ள சிகையலங்கரிப்பு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.