லிந்துலை நகரசபை புதிய தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

339 0
தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் தெரிவு எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தெரிவித்தார்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை கேட்போர் கூடத்தில் 05/03/2021 இடம்பெறவிருந்த புதிய தலைவர் தெரிவிற்கான தேர்தல் பேதியளவான உறுப்பினர்கள் சமூகம் தராததையடுத்தே ஆணையாளர் ஒத்தி வைத்தார்.

தலைவராக இருந்த அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டினையடுத்து அவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தலைவர் பதவியிலிருந்து இடை நிறுத்தி, தலவாகலை லிந்துலை நகரசபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பனர் எல்.பாரதிதாசன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலை மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலித் யூ கமகே வெளியிட்டிருந்தார்.

இதன் பின்னர் அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டினை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த குழுவினரின் அறிக்கையில் அசோக சேபால மீண்டும் தலைவராக நியமிக்க கூடாதென அறிவிக்கப்படதையடுத்து புதிய தலைவர் தெரிவிற்கான தேர்தலை 05/03/ நடாத்த அறிவிக்கப்பட்டிருந்தது .

அந்த வகையில், பலத்த பொலிஸ் பாதுகப்போடு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் தலைவாக்கலை லிந்துலை நகரசபைக்கான தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்டிருந்த நிலையில் அங்கு மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே வருகைத்தந்திருந்தனர் .

ஸ்ரீலங்க பொது ஜன பெரமுன கட்சி உறுப்பினர்களான சந்தன பிரதீப் குணதிலக, பஷான் நிமாலக, பிரசண்ண விதானகே ஆகிய மூவரே வருகைத்தந்திருந்ததுடன் இம் மூவரும் நகரசபை தலைவருக்கான போட்டியாளர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர்களாக 11 பேர் உள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஒருவர் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மூவர் , ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர் , மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மற்றும் சுயேற்சை குழு உறுப்பினர் ஒருவருமாக எட்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்து தேர்தலை நடாத்தி தலைவரை தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை இல்லை என தெரிவித்த மத்தியமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிக்கு தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் தெரிவிற்கான தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

-மலையக நிருபர் இராமச்சந்திரன்-