சட்டவிரோத காணி விற்பனைக்கு எதிராக புன்னக்குடா மக்கள் ஆர்ப்பாட்டம்

246 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத காணி விற்பனைகளுக்கு எதிராக ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரிக்கும் காணி மாபியாக்களின் செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை,கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி ஆகிய பிரிவுகளில் உள்ள அரச காணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்து வருவதையும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் கண்டித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறிப்பாக இப்பகுதியிலுள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பை முன்னெடுத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமக்கு வழங்கப்பட்ட காணிகள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.