ஹொரணையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கும் இடம் கண்டுபிடிப்பு

253 0

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ருவன் மது சிந்தனவுக்குச் சொந்தமான போதைப்பொருட்களை மறைத்து வைக்கப் பயன்படுத்திய இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹொரணை பிரதேசத்தில் இராணுவ இலக்க தகடு கொண்ட வாகனத்திலிருந்து 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக கடந்த 25 ஆம் திகதி இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றிருந்த சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாணந்துறை வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடமிருந்து 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இமதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொஸ்த்தரவத்த பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் மோப்ப நாயுடன் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ருவன் மது சிந்தன என்ற நபருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை, அவரால் நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் சிலர் தொஸ்த்தரவத்த பகுதியில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன்போது பிளாஸ்ரிக் பீப்பாய்களுக்குள் போதைப் பொருட்களை மறைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது 33 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.