காங்கேசன்துறை துறைமுகத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடதாரகை படகு

195 0

யாழ் நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு திருத்த வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனை திருத்தி விரைவாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தீவு கடல் மார்க்க போக்குவரத்து சேவைகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தது.

இதில் வடதாரகை திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு என வட மாகாண சபையால் வழங்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நெடுந்தீவுக்கான போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி கருத்து தெரிவிக்கையில்,

நெடுந்தீவுக்கான போக்குவரத்துகளில் ஈடுபடும் வடதாரகை பயணிகள் படகானது திருத்தவேலைகளுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

35 .5 மில்லியன் ரூபா நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியனுக்கு மேல் ஆகி உள்ளது.

இதனை விட நீண்ட காலம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் குமுதினி படகானது சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.