வடக்கு மக்களிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

198 0

வடக்கு மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

108 மையங்களில் இந்த தடுப்பூசி மருந்து வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்க முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் -19 நோயத் தொற்றைக் கட்டுப்படுத்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியவர்களின் பட்டியலை வழங்கும் பணி பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களிடமிருந்து பட்டியலைப் பெற்று 108 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை வழங்கும் பணி மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தடுப்பூசி மருந்தை ஏற்றுவதில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படவில்லை.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ந்த ஏனையோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கொவிட் -19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு ஒத்துழைக்கவேண்டும் என்றார்.