தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி

200 0

தமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.

குமரி மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள கனிமொழி எம்.பி. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படவில்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தி.மு.க. போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கிறார்கள். திருவள்ளுவர் சிலை தி.மு.க.வுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ சொந்தமானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் சிலை தமிழர்களின் அடையாளம்.

வெற்றி நடை போடும் தமிழகம் என்று மக்களின் வரிபணத்தில் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் எதில் வெற்றிநடை போடுகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. முதலீடுகள் வரவில்லை. முதியோர் உதவித்தொகை கொடுக்க கூட பணம் இல்லை என்று கூறும் அரசு, விளம்பரத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க டெல்லி சென்று உள்ளார். டெல்லியில் கேட்டு வந்து தான் எல்லா முடிவும் எடுக்கிறார்கள். டெல்லியில் இருக்க கூடியவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். பா.ஜனதாவின் பினாமி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை சூறையாடி விட்டார்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். இதற்காக தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் எங்களுடன் தான் உள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லாவிட்டால் தி.மு.க.வும் மக்களும் சேர்ந்து தேர்தலை நியாயமாக நடத்தி வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.