சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – பொதுவெளியில் தோன்றினார் மாயமான ஜாக் மா

220 0

சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் இடையே எழுந்த மோதல் காரணமாக சீன கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த சில மாதங்களாக மாயமாகி இருந்தார்.

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்பாட்டுவருபவர் ஜாக் மா. 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமான அலிபாபா சீனாவின் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை சந்தையை முழுவதும் தனதாக்கிக்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஜாக் மா சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில் சமீபகாலமாக அலிபாபா நிறுவனத்திற்கும் சீன அரசு அதிகாரிக்களுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான மோதல் ஏற்பட்டது. சீன அரசின் செயல்பாடுகள் தனது நிறுவன வளர்ச்சியை தடுப்பாதாக ஜாக் மா குற்றம்சுமத்தினார்.

இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜாக் மா-வை காணவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியானது. சீன அரசு மீது விமர்சனம் செய்ததால் அதிகாரிகள் ஜாக் மா-வை கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தது.
இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 மாதங்களுக்கு மேலாக பொதுவெளியில் தோன்றாததால் அவரது நிலைமை என்ன ஆனது என்ற சர்ச்சை எழுந்து வந்தது.

 

இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜாக் மா இன்று பொதுவெளியில் தோன்றியுள்ளார். சீனாவில் உள்ள ஊரக பகுதிகளை சேர்ந்த 100 ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக சந்திப்பு நிகழ்ச்சியில் ஜாக் மா உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாக் மா, ’இந்த கொரோனா பெருந்தொற்று முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் சந்திப்போம்’ என்றார்.

பொதுவெளியில் காணொலி காட்சி மூலம் ஜாக் மா தோன்றியபோதும் அவர் இன்னும் சீன அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாரா? என்ற தகவல் வெளியாகியகவில்லை.

எது எப்படியாயினும் 3 மாதங்களுக்கு மேலாக மாயமாகி இருந்த ஜாக் மா மீண்டும் தோன்றியுள்ளது அவரது நிறுவன ஊழியர்களுக்கும், அவரது நிலைமை என்ன? என்பது கவலையில் இருந்த மக்களுக்கும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.