மட்டக்களப்பில் கடும் மழை- பல பகுதிகளில் நீரில் மூழ்கின

252 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த மழையினால்  மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

ஐயங்கேணி, விபுலானந்தபுரம், பாரதிபுரம், ரெட்ணாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ச்சியாக பெய்துவரும்  கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

குறித்த கிராமங்களின் வீதிகள் முற்றாக நீரில் மூழ்கியமையினால், மக்கள் வீதிப்போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். வீடுகளினுளும் வெள்ள நீர் சென்றிருப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி கிராம மக்களும் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலம்பாவெளி– விநாயகர்புரம் மற்றும் விபுலானந்தபுரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

மேலும், குறித்த மழையின் காரணமாக சில பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.