11 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது..!

283 0

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர் வரும் 6 மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரத்தீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதோடு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை ஆரம்பமாகும் தினத்திலிருந்து சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாகவே அவர் செயற்படுவார்.

அத்துடன் சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக ஒரு வருடம் என்பது 8 மாதங்களாகவே கணக்கிடப்படுகின்றது.

இதற்கமையவே அவருக்கு இரண்டு வருடங்கள் 8 மாதங்கள் தண்டனைக்குரிய காலமாக காணப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கான சிறைத்தண்டனை ஆரம்பமான தினத்திலிருந்து 6 மாதங்களின் பின்னர் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாகின்றது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 89 ஆவது பரிந்துரையில் தெளிவாக இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உயர் நீதிமன்றம் இந்த தீர்பினை வழங்கியுள்ளமையினால் அவருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும் முடியாது என்பதோடு மேன்முறையீடு செய்யவும் முடியாது.

அது மாத்திரமின்றி உயர்நீதிமன்றில் அளிக்கப்பட்டுள்ள நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையின் பின்னர் சுமார் 7 வருடங்களுக்கு தண்டனைக்குரியவரின் குடியியல் உரிமை இரத்தாகும்.

அதாவது 11 வருடங்களின் பின்னரே அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியும் என்பதோடு, குடியியல் உரிமையும் மீளக்கிடைக்கப்பெறுகின்றது என்றார்