தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வட மாகாணத்திற்கு போதுமானதாகவுள்ளது – ஆ. கேதீஸ்வரன்!

254 0

தற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வட மாகாணத்திற்கு போதுமானதாகவுள்ளது. தேவையேற்படின் மாத்திரமே அன்டிஜன் பரிசோதனை வடபகுதியில் மேற்கொள்ளப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தற்போதைய நிலைமையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 600 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது. எனவே தற்போதைய நிலையில் வட பகுதியில் அன்டிஜன் பரிசோதனை தேவையற்ற ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஏனைய மாகாணங்களில் குறித்த அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது. ஏனெனில் அந்த மாகாணங்களில் எமது மாகாணத்தை போல பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதன் காரணமாக அவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

அத்துடன் அன்டிஜன் பரிசோதனையில் ஒரு சில நம்பிக்கையில்லா தன்மையும் காணப்படுகின்றது. அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று என காண்பிக்குமாயின் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் போது அவருக்கு தொற்று இல்லை  என காண்பிக்கும்.

அதே போல் அன்டிஜன் சோதனையின் போது ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தியவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அவருக்கு பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படும்.

எனவே அன்டிஜன் பரிசோதனை என்பது மிகவும் நம்பகரமான சோதனை முறை அல்ல.  மேலும்  வடக்கு மாகாணத்தில் போதியளவு பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணமாக நாம் தற்போது அதைப்பற்றி பரிசீலிக்க தேவையில்லை.

வெளிமாவட்டங்களில் இருந்து ஆணையிறவு மற்றும் பூநகரிப் பாதை ஊடாக வருவோருக்கு நாம் அதிகாலை வேளைகளில் பி.சி.ஆர். சோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தோருக்கு நாம் ஒவ்வொரு நாளும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்“ எனத் தெரிவித்துள்ளார்.