மலிவான விளம்பரத்தை திமுக தேடுகிறது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

179 0

பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை திமுக தேடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பரிசுவழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார். கொரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கடுகளவும் ஸ்டாலினுக்கு எண்ணமில்லை.

நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வரவில்லை; தன் குடும்பத்திற்காக அரசியல் செய்கிறார் ஸ்டாலின். நான் முதல்வரானதில் இருந்து ஊழல் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச்செயலகம் கட்ட ரூ.200 கோடிக்கு கணக்கு போட்டு விட்டு ரூ.425 கோடி தந்தார்கள். ஆற்காடு-திருவாரூர், நாகை-கட்டுமாவடி வரை சாலை அமைத்ததில் தி.மு.கஆட்சியில் முறைகேடு. தி.மு.க ஆட்சியில் ராமநாதபுரம்-தூத்துக்குடி வரை சாலை அமைத்ததிலும் முறைகேடு நடந்துள்ளது.

தி.மு.க ஆட்சிக் காலத்தை போன்று டெண்டர் இல்லை; தற்போது இ-டெண்டர் விடப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில்தான் டெண்டர்கள் விடப்பட்டத்தில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது. மு.க.ஸ்டாலினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தி.மு.க ஆட்சியிலும் டெண்டர் எடுத்தவர்கள்தான். இ-டெண்டர் முறையில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை.

பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தி.மு.க தேடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.