தமிழக சட்டசபை தேர்தல்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரத்தை தொடங்குகிறார்

203 0

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன.

இதனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்தநிலையில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி நாளை (18-ந் தேதி) காலை 9 மணிக்கு பெரிய சோரகை செல்கிறார்.

அங்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த கரிய பெருமாள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்கிறார்கள். முன்னதாக அவர் தேர்தல் பிரசாரம் செய்யும் சிறப்பு வாகனம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் அவர் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் தொடங்குவதையொட்டி தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் இன்று சேலம் வருகிறார்.

எடப்பாடி பகுதியில் மினி கிளினிக் தொடங்கும் இடம் மற்றும் தேர்தல் பிரசாரம் தொடங்கும் இடங்களில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.