அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட முடிவு

232 0

அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டமசோதாக்களும் விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்க கூடியது. இந்த சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் கோர்ட்டுக்கு செல்ல முடியாது. ஆர்.டி.ஓ., கலெக்டரிடம் மட்டுமே மனு கொடுக்க முடியும். லாபகரமான விலை பற்றி எந்த வார்த்தையும் சட்டத்தில் இடம் பெறவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் கிலோ நெல்லுக்கு ரூ.19 தருவதாக பேசி, பின்பு தரம் சரியில்லை என்று காரணம் சொல்லி கிலோவுக்கு ரூ.10 கொடுத்தாலும் விவசாயிகள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். விளைப் பொருட்களை பதுக்கல்காரர்கள் பதுக்கி வைக்க முடியும். இதனால் இடைத்தரகர்கள் மட்டுமே லாபம் அடைய முடியும்.
எனவே வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து தமிழக வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து விளக்கி, இந்த சட்டத்துக்கு எதிரான எங்கள் கருத்தை முன் வைத்துள்ளோம்.
இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனது தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். திருச்சியில் எங்கள் விவசாயிகள் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் டெல்லி செல்லும் தேதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விவசாய சங்க நிர்வாகிகள் மேகராஜன், செல்வபெருமாள், ராசிராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு நூதன போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.