மெரினா கடற்கரைக்கு நாளை முதல் பொதுமக்கள் செல்லலாம் -மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்

223 0

கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் மெரினா கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியே மூடப்பட்டது.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் மெரினா கடற்கரையை திறப்பதற்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகளும் மெரினா கடற்கரையை ஏன் தொடர்ந்து மூடி வைத்திருக்கிறீர்கள்? என்று சென்னை மாநகராட்சிக்கு கேள்வியை எழுப்பியதுடன், இதற்கு உரிய முடிவு எடுக்காவிட்டால் நாங்களே உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையை திறப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை டிசம்பர் 14-ந் தேதி திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இதன்படி நாளை மெரினா கடற்கரை மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.

9 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு நாளை பொது மக்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் கடற்கரைக்கு வருபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

இதனை நாளை முழுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து செயல்பட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களின் மனதை அதிகம் கவர்ந்தது மெரினா கடற்கரைதான். ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு அலைமோதும் கூட்டமே அதற்கு சான்றாகும்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், புத்தாண்டு தினத்திலும் மக்கள் அதிகளவில் மெரினாவில் கூடுவார்கள். சுண்டல், மீன், பஜ்ஜி கடைகளும் அங்கு அதிகளவில் காணப்படும்.

நாளை அதுபோன்ற கடைகளை முழுமையாக அனுமதிப்பதா? இல்லை குறைந்த அளவிலான கடைகளுக்கே அனுமதி அளிப்பதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலைக்கு செல்வதற்கு காமராஜர் சாலையில் இருந்து 3 இடங்களில் வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

இந்த இடங்கள் கடந்த 9 மாதங்களாக தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. அதனை அகற்றி ஒழுங்கு படுத்தும் பணியில் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 18 நாட்களில் ஆங்கில புத்தாண்டு வருகிறது. சென்னையில் மெரினாவில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்.

இன்னும் 2 வாரங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து பொங்கல் பண்டிகையும் வருகிறது.

காணும் பொங்கல் அன்று கூட்டம் அதிகமாக காணப்படும். மெரினா கடற்கரை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் புத்தாண்டு மற்றும் காணும் பொங்கலுக்கு மக்கள் மெரினாவுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மெரினாவில் தினமும் நடைபயிற்சி செய்பவர்களும் நாளை முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் கடந்த 9 மாதங்களாக களை இழந்து காணப்பட்ட மெரினா கடற்கரை மீண்டும் வழக்கம் போல பரபரப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.