பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஸ்கெலியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் பெருந்தோட்ட தொழிற்சங்கப் பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமே இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் கொரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு, 2021 ஜனவரி முதல் 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இது அடிப்படை நாட்சம்பளமாகவே வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதனை விடுத்து தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்றும் விதத்தில் சம்பள உயர்வு இடம்பெறக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

