ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளதா? என்பது குறித்து மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வேல் யாத்திரை நவம்பர் 6-ந் தேதி தொடங்கியது. நாளை (அதாவது இன்று) நிறைவு பெற உள்ளது. வேல் யாத்திரைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது.
குறிப்பாக முருக பக்தர்களிடம் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு இருந்தது. ஆனால் புயல் காரணமாக பல மாவட்டங்களில் யாத்திரையை நிறுத்தி விட்டோம். எனினும் யாத்திரை நாளை திட்டமிட்டபடி முடியும். எத்தனை தடங்கல் வந்தாலும், அத்தனை தடங்கல்களையும் மீறி எங்களுடைய வேல் யாத்திரை நடைபெறும்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் தேசிய பற்றாளர். ஆன்மிகவாதி. அவர் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு எங்களது தேசிய தலைமையின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா இருக்கிறதா? என கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

